கம்பஹா - யக்கல பகுதியில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னனி (JVP) கைப்பற்றியது சட்டவிரோதமானது என கம்பஹா நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான மனுவின் விசாரணை நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அலுவலகத்தை முன்னணி சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தைக் கைப்பற்றியது சட்டவிரோதமானது என அறிவித்த பின்னர், அந்த அலுவலகத்தை FLSPயிடம் ஒப்படைக்குமாறு கம்பஹா கூடுதல் நீதவான் ஷிலானி பெரேரா உத்தரவிட்டதாக அக்கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல்
இதேவேளை, அலுவலகத்திலிருந்து முன்னணி சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை விரட்டியடித்ததும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலுவலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜே.வி.பியினருக்கு உத்தரவிடக் கோரி, முன்னணி சோசலிசக் கட்சி கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
பிரதிவாதிகள்
மேற்படி கட்சியின் நிர்வாகச் செயலாளர் சமிர கொஸ்வத்த மற்றும் கட்சியின் பிற உறுப்பினர்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதுடன் ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் பலரும் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.
கடந்த வருடம் செப்டம்பரில் யக்கலவில் உள்ள முன்னணி சோசலிசக் கட்சியின் அலுவலகத்திற்குள் ஜே.வி.பி ஆதரவாளர்கள் குழு ஒன்று புகுந்து, அங்கிருந்த சிலரைத் தாக்கிய பின்னர், அலுவலகத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றியதைத் தொடர்ந்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்போது, காவல்துறையினரும் பாரபட்சமாக நடந்துகொண்டதாக முன்னணி சோசலிசக் கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
