இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில், தன் மகளுடைய விவாகரத்தை மேளதாளத்துடன் கொண்டாடியுள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர்.

மகளுடைய விவாகரத்தை கொண்டாடிய நீதிபதி

சமீபத்தில் சமூக ஊடகங்களில் ஒன்றில் விளம்பரப்படம் ஒன்று பகிரப்பட்டது. அதில், ஒருவர் மேளதாளங்களுடன் தனது மகள் வீட்டுக்கு வருவார்.

எல்லோரும் என்னவென்று பார்க்க, தன் மகளைத் தான் மேளதாளத்துடன் மணமகனுடைய வீட்டுக்கு அழைத்துவந்ததுபோலவே, தற்போது அவளை திரும்ப தாய் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்ததாக கூறுவார் அவர்.

அதாவது, கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு நீ அவன் வீட்டில் வாழவேண்டாம், நம் வீட்டுக்கு வந்துவிடு, புதுவாழ்வைத் துவக்கு, நாங்கள் உனக்கு ஆதரவு என அவர் சொல்லாமல் சொல்ல, மகள் கண்ணீருடன் ஓடோடிவந்து தந்தையைக் கட்டி அணைத்துக்கொள்ளுவாள். 

தற்போது அதேபோன்றதொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்திலுள்ள மீரட் நகரில் நடந்துள்ளது.

விவாகரத்தான பெண்களை இன்னும் அவமரியாதையுடன் நடத்தும் பலர் இருக்க, விவாகரத்தான தன் மகளை மேளதாளம் முழங்க, மாலையும், இனிப்புகளும், நடனமுமாக தன் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஞானேந்திர குமார் ஷர்மா.

ஷர்மாவின் மகளான வினீதா என்னும் ப்ரனீதா வசிஷ்டாவுக்கும் மேஜர் கௌரவ் அக்னிஹோத்ரி என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு திருமணம் ஆனது. 

சீக்கிரமாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாக, இம்மாதம் 4ஆம் திகதி இருவருக்குமான விவாகரத்து இறுதியானது.

மகளுடைய மகிழ்ச்சியும் கௌரவமும்தான் தனக்கு முக்கியம் என்பதைக் காட்டுவதற்காக மேளதாளத்துடன் அவரை தன் வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார் ஷர்மா.

ப்ரனீதாவை அழைத்துவர மேளதாளத்துடன் சென்ற ஷர்மா உட்பட அனைவரும், ப்ரனீதாவின் புகைப்படம் மற்றும் நான் உன்னை நேசிக்கிறேன் என் செல்ல மகளே என்று எழுதப்பட்ட சட்டைகளை அணிந்திருப்பதை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.