சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக இன்று பதவியேற்றிருக்கிறார் சி.ஜோசப் விஜய். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டார்கள். பதவியேற்ற பிறகு மொத்தம் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். மேலும், கடந்த அரசின் மீது தனது பேச்சில் குற்றச்சாட்டையும் வைத்திருந்தார். இந்நிலையில் இத்தனை வருடங்கள் விஜய்யின் பெயரைகூட உச்சரிக்காத மு.க.ஸ்டாலின் முதல்முறையாக அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதே வாழ்த்தில் அவரது குற்றச்சாட்டுக்கு கடும் பதிலடியை கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று இன்று முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார் விஜய். பதவியேற்றதும், 'வீடுகளுக்கு 200 யூனிட்டுகள் இலவச மின்சாரம், சிங்கப் பெண் அதிரடி படை உருவாக்குதல், போதை பொருளை அழித்தலுக்கான நடவடிக்கை' ஆகிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதேபோல் தனது பேச்சின்போது, 'கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். அதற்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கல். உள்ளே வந்து பார்த்த பிறகுதான் தெரிகிறது; கடந்த அரசு கஜானாவை துடைத்து சென்றிருக்கிறது. கடனும் பத்து லட்சம் கோடி ரூபாய் இருக்கிறது' என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின் பதிலடி: முதலமைச்சராக முதல் பேச்சிலேயே திமுக மீது குற்றச்சாட்டை வழக்கம்போல் வைக்கிறாரே என்று பலரும் விமர்சித்தார்கள். இந்நிலையில் திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்; விஜய்க்கு தன் வாழ்த்தையும், பதிலடியையும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. நடிகர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படி பேச ஆரம்பிக்காதீர்கள்: பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன். எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும். ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

எல்லாம் வரம்புக்குள்தான்: 'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே... அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

நம்புகிறேன் நான்: "நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்" எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன். தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.