கோடைக்கால வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது.
இந்த வெப்பத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை குறைக்க பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ஜப்பானைச் சேர்ந்த SDRS மற்றும் Trusco நிறுவனங்கள் இணைந்து Do Hiemon என்ற தனிநபர் குளிர்விக்கும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்த சாதனம் உள்ளே நுழையும் நபரின் உடலை சில நிமிடங்களில் குளிர்விக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 7 அடி உயரமும், 3.9 அடி ஆழமும் கொண்ட இந்த எஃகு பெட்டிக்குள் ஒருவர் நின்றவுடன் குளிர்ந்த காற்று வீசும்.
இந்த சாதனத்தின் உள்ளே வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாக பராமரிக்கப்படுகிறது. மேலும், 5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்விக்கப்பட்ட காற்று உடலின் மேற்பகுதியை நோக்கி செலுத்தப்படுகிறது.
சுமார் 5 நிமிடங்கள் இந்த சாதனத்தை பயன்படுத்தினால் உடலில் குறிப்பிடத்தக்க குளிர்ச்சி ஏற்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக நேரம் குளிர்ந்த சூழலில் இருப்பதைத் தவிர்க்கும் வகையில் இதில் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாக இயங்குவதை நிறுத்தும் டைமர் வசதியும் உள்ளது.

வழக்கமான ஏர் கண்டிஷனிங் அமைப்புகளை விட குறைந்த மின்சாரத்திலேயே இந்த சாதனம் இயங்கும் என்று Trusco நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எளிதாக எடுத்துச் செல்ல முடியும்.
கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், பண்ணைகள் போன்ற அதிக வெப்பம் நிலவும் இடங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்தலாம்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வந்த Do Hiemon சாதனத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
