டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் பேராவூரணி அரசுப்பள்ளி மாணவி சகானாவும் ஒருவர். இவருக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் குக்கிராமத்தை சேர்ந்த இவரது தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். மாணவி சகானா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 524 மதிப்பெண் பெற்றிருந்தார். டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்த சகானாவின் குடும்ப சூழல் பற்றி அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை தன் சொந்த செலவில் நீட் பயிற்சி வகுப்பில் படிக்க வைத்துள்ளார். அதன்படி நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சகானாவுக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.