பிரிட்டனில் சுமார் 1,311 பேருக்கு தவறுதலாக கரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், ‘ நவம்பர் 19 முதல் நவம்பர் 23 வரையிலான கரோனா பரிசோதனையில் 1,311 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாக தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது. உயிரிழப்பும் நூற்றுக்கணக்கில் உயர்ந்தது. இதையடுத்து அங்கு கரோனா வைரஸ் 2-வது அலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரிட்டனில் கரோனா தொற்றால் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்ட சோதனையை நெருங்கியுள்ளன.