மஹர சிறைச்சாலை சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு இன்றையதினம் (09) மீண்டும் அழைக்கப்பட உள்ளது.

நேற்றைய தினம் (08) குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கைதிகளின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் விசேட நீதிமன்ற வைத்திய அதிகாரிகள் குழுவினரால் மேற்கொள்ளப்படவேண்டும் என நேற்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டன.

அதன்படி குறித்த சமர்ப்பணங்கள் தொடர்பான தீர்ப்பு இன்றையதினம் பெற்றுக் கொடுக்கப்பட உள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த 11 கைதிகளில் 7 பேரின் அடையாளம் தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் 165 பேருக்கும் அதிகமானோரிடம் இடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள், மருத்துவர்கள் மற்றும் தாதியர்களிடம் இடம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.