பண்ருட்டி அருகே உள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் அரவிந்த் (வயது 17). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் அரவிந்த், அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்களான ஸ்ரீதர்(22), அருண்(18) ஆகியோருடன் எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். அங்கு அவர்கள் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணை அருகில் நின்று குளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அரவிந்த், எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதர், அருண் ஆகியோர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் அரவிந்த் ஆற்றில் மூழ்கினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி, அவரை தேடினர். ஆனால் அவர்களால் அரவிந்தை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கிய அரவிந்தை மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அரவிந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.