70 நாட்களை எட்டியிருக்கும் தமிழ் பிக்பாஸ் 4-வது சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி உள்ளிட்ட 6 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமிருந்த 12 போட்டியாளர்களில் இந்த வாரம் வெளியேற்றப்படுவோரின் பட்டியலில் சோம், நிஷா, ரமேஷ், கேப்ரியல்லா, ஷிவானி மற்றும் ரம்யா உள்ளனர்.

இவர்களில் ஒருவர் இந்தவாரம் வெளியேற்றப்படுவார் என பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்த நிலையில், இரண்டு பேர் வெளியேற்றப்பட உள்ளதாக இன்று வெளியான முதல் ப்ரமோவில் கமல்ஹாசன் தெரிவித்தார். மேலும் இன்று ஒருவரும் நாளை ஒருவரும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறினார்.

அதன்படி நடிகர் ஜித்தன் ரமேஷ் இன்று வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதைத்தொடர்ந்து நாளைய எபிசோடில் அறந்தாங்கி நிஷா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் தனது நகைச்சுவையான நடவடிக்கைகளாலும், பேச்சுத் திறமையாலும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்ற நிஷா, ஒரு சில வாரங்களாக அமைதியாக இருப்பதாகவும் தனித்து விளையாடமால் அர்ச்சனா குரூப்பில் ஒருவராக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் நிஷாவை தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துமாறு கமல்ஹாசன் சூசகமாக கூறினார்.


எனவே இந்த வாரத்தில் நடைபெற்ற ‘புதிய மனிதா’  டாஸ்க்கில் ஏதாவது செய்து மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என நிஷா நினைத்தாரோ என்னவோ அர்ச்சனாவிடம் அவரது தந்தை மரணம் குறித்து பேசி நெருங்கிய தோழியின் கோபத்தை சம்பாதித்துக் கொண்டார். இன்று வெளியான ப்ரமோவில் இந்த விவகாரம் குறித்து போட்டியாளர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியுள்ளார். மேலும் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்பட்டிருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என தெரிகிறது.