யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையினால் பி.சி.ஆர்.பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“யாழ்.மாவட்டத்தில் மருதனார் மட சந்தை பகுதியில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 32 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் ஊடாக யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகப்படுவதனால், பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

அதேவேளை கல்வி நடவடிக்கைகளை பொறுத்த வரைக்கும் உடுவில் மற்றும் தெல்லிப்பளை கோட்டங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை தற்போது மூடியுள்ளோம். அது தொடர்பில் சுகாதார பிரிவினரும், கல்வி பிரிவினரும் கலந்துரையாடி ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு மீண்டும் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் பரிசீலனை செய்வார்கள்.

யாழ்.மக்கள் மிக அவதானமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்குமாறு கோருகின்றோம். ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், சுகாதார பிரிவினருக்கு அறிவியுங்கள்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் இதுவரை சுற்று நிரூபங்கள் எவையும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அது கிடைத்ததும் அந்த பகுதிக்கான பிரதேச செயலாளர்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.