கோவை வெள்ளலூர் அருகே உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மனைவி உமா (வயது47). இவர் செல்வபுரம் போலீ்ஸ் நிலைய குற்றப்பிரிவில் ஏட்டாக வேலைபார்த்து வருகிறார். உமா போத்தனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
நானும் ஆனந்தன் என்பவரும் கடந்த 2007-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவர் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். எனது கணவர் ஆனந்தன் சென்னையில் எனது பெயரில் உள்ள வீட்டை விற்றுவிட்டு கோவையில் வீடு வாங்க வலியுறுத்தி துன்புறுத்தி வந்தார். நான் விற்க மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவருக்கு காங்கேயம்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் அந்த பெண்ணுடன் சுற்றி திரிந்தார். இதனை நான் தட்டிக்கேட்டபோது அவர் என்னை தாக்கிவிட்டு காங்கேயம்பாளையத்துக்கு சென்று அந்த பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். சம்பவத்தன்று நான் வீட்டில் இருந்தபோது, கள்ளக்காதலியுடன் வீட்டுக்கு வந்த என்னுடைய கணவர் மோட்டார் சைக்கிள் சாவியை தருமாறு கேட்டார். நான் கொடுக்க மறுத்ததால் அவரும் அந்த பெண்ணும் சேர்ந்து என்னை எனது குழந்தைகள் முன்பு வைத்து தாக்கி தலைமுடியை பிடித்து கீழே இழுத்து தள்ளி கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் பெண் போலீசை அடித்து உதைத்து கொடுமைப்படுத்திய அவருடைய கணவர் ஆனந்தன் மற்றும் அவரது கள்ளக்காதலி ஆகியோர் மீது கொலை மிரட்டல் பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கள்ளக்காதலியை தேடி வருகிறார்கள்.