ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி உள்ள கே.கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 32), சரக்கு வேன் டிரைவர். இவரது மனைவி வீரம்மாள் (26). இவர்களுக்கு 4 வயதில் மதுமதி என்ற மகள் உள்ளார்.


கடந்த சில மாதங்களாக காளிதாஸ் மது குடித்து விட்டு வந்து வீட்டில் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வேலைக்கும் சரியாக செல்லவில்லை.

காளிதாசின் மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்று இரவும் காளிதாஸ் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதில் கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இன்று அதிகாலையும் இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த காளிதாஸ் மனைவி வீரம்மாளை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விழுந்த வீரம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வீரம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர்.

குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்சனையில் கணவர் மனைவியை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.