பாளை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி மாரியம்மாள் (வயது56). இவர்களது மகன் சண்முகராஜ்.
இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மைனர் முத்து என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு இருந்தது. இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்களும் நடந்து வந்தன.

நேற்றும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அப்போது மைனர் முத்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் உருட்டுக்கட்டையால் மாரியம்மாள், அவரது மருமகள் மனோகரம்மாள் ஆகியோரை சரமாரி அடித்து தாக்கினர்.

இதில் மாரியம்மாள், அவரது மருமகள் மனோகரம்மாள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். மனோகரம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து சண்முகராஜ் சிவந்திபட்டி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

இது தொடர்பாக மைனர் முத்து மற்றும் அவரது உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.