செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் இரும்புலிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். டிராக்டர் உரிமையாளர். இவருடைய மகன் நவீன் (வயது 20). நேற்று காலை நவீன், லத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட நீலமங்கலம் கிராமத்தில் ஏரிக்கரை அருகில் உள்ள வயலில் ஏர் ஓட்டினார்.
வேலை முடிந்ததும் டிராக்டரில் வீடு திரும்பினார். அப்போது அவருடன் நீலமங்கலம் பெரிய காலனியை சேர்ந்த மகா விஷ்ணு (20) மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த டிசா (13), ஹரி (20) ஆகியோரும் டிராக்டரில் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டரில் பிரேக் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் டிராக்டரை ஓட்டி வந்த நவீன் மற்றும் மகாவிஷ்ணு இருவரும் டிராக்டருக்கு அடியில் சேற்றில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். டிசா, படுகாயம் அடைந்தார். ஹரி, அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இதுபற்றி அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.