அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏற்றார். அவர் முந்தைய அதிபர் டிரம்ப் பிறப்பித்த பல்வேறு உத்தரவுகளுக்கு தடை விதித்து கையெழுத்திட்டார்.

அதில், மெக்சிகோ நாட்டு எல்லையில் தடுப்புச்சுவர் கட்டுவதற்கு அளிக்கும் நிதி திட்டத்துக்கு தடை விதித்தது முக்கியமானதாகும். அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து எல்லை வழியாக சட்டவிரோதமாக அமெரிக் காவுக்குள் நுழைபவர்களை தடுக்க அங்கு பிரமாண்ட தடுப்புச்சுவரை டிரம்ப் கட்டினார்.

அதேபோல் பல்வேறு குடியேற்ற கொள்கைகளை கொண்டு வந்தார். இதில் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து முகாம்களில் தங்க வைக்க டிரம்ப் உத்தர விட்டார். இதையடுத்து பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.

முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை, குழந்தைகளை மீண்டும் ஒன்றிணைக்க அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் தனது கணவரின் முயற்சிகளில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறும்போது, ‘பிரிக்கப்பட்ட குடும்பங்களையும், குழந்தைகளையும் ஒன்றிணைப்பதற்காக ஒரு பணிக்குழுவை தொடங்குவது குறித்து அறிவிக்க திட்டமிட்டுள்ளார். இதில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்க ஆர்வமாக உள்ளார் என்றார்.

பெற்றோருடன் மீண்டும் சேர்க்க வேண்டிய 2,700-க் கும் மேற்பட்ட குழந்தைகளை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஆனால் 611 குழந்தைகளின் பெற்றோர் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை என்று அமெரிக்க சிவில் சுதந்திரங்கள் யூனியன் தெரிவித்துள்ளது.