நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தெற்கு இளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பால்கனி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இளைய மகள் லெட்சுமி (வயது 5). சம்பவத்தன்று லெட்சுமியின் தாயார் பால்கனியும், தந்தை முருகனும் கூலி வேலைக்கு சென்று விட்டனர்.
சிறுமி லெட்சுமி வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது சிறுமி கையில் தீப்பெட்டி இருந்தது. தீப்பெட்டியை திறந்து தீக்குச்சியை விளையாட்டாக பற்ற வைத்து லெட்சுமி விளையாடினாள்.
அப்போது எதிர்பாராத விதமாக தீ குழந்தையின் ஆடையில் பிடித்தது. தீயை குழந்தையால் அணைக்க முடியவில்லை.
தீ வேகமாக பரவியதால் அவள் அலறினாள். அவளது சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
ஆனாலும் குழந்தை லெட்சுமியின் உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு குழந்தை லட்சுமி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்