வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிப்பதுடன், கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது.
மேலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா வைரசின் பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் 10-க்கும் குறைவான நபர்களே தினமும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 18 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய பரிசோதனை முடிவில் மேலும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 25 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இதுவரை 21 ஆயிரத்து 222 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 747 பேர் குணமடைந்துள்ளனர். 352 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது 123 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.