களவஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி உயிரிழந்த 12 வயதுடைய சிறுமியின் மரணத்திற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். 

குறித்த சிறுமியின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையின் விஷேட நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் நேற்று (23) பூரண மரண பரிசோதனை அறிக்கை வௌியிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

அதில் குறித்த சிறுமிக்கு நீண்ட நாட்களாக தாக்குதல் மேற்கொண்டதினால் ஏற்பட்ட காயத்தின் ஊடாக கிருமி சென்ற காரணத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பெண்கள் மூவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 

குறித்த சிறுமியின் தாய் வௌிநாட்டில் சேவையாற்றுவதுடன் அவருடைய தாயின் சகோதரியின் அரவணைப்பில் குறித்த சிறுமி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.