இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 54 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று காலை சுமார் 300 படகுகளில் 1,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நள்ளிரவு நேரத்தில் அவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை - இந்திய கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை அங்கிருந்து விரட்டியுள்ளனர். 

அப்போது 2 படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து அதில் இருந்த மரியசிங்கம், ராபின்சன், பேசியர், பிராங்கிளின், சுப்ரீஸ், சோனைமுத்து, சக்தி, விஜயன், ரோசாலிஸ், குமார், கெரோனிஸ், மகேசுவரன், ஜான், கதிர், சிவா, அந்தோணி புளூட்டஸ், ராயப்பூ, அஜிரோ உள்பட 20 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

இதே போல் காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 20 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் 

அவர்களிடம் இருந்து 5 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.