வனிதா விஜயகுமார், ரம்யா பாண்டியன், உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்ட குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது சீசன் கடந்த ஆண்டு நவம்பர் 14-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோர் இடம்பெற்றிருக்கும் இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, வீஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் உள்ளனர். இவர்களின் நகைச்சுவையை ரசிக்க பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. ஷிவாங்கி, புகழ் உள்ளிட்டோரது நகைச்சுவை மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருப்பதால் திரைப்பட வாய்ப்புகளும் இவர்களைத் தேடி வந்திருக்கிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவாங்கி, “என்னை எனது குரலுக்காகவே பலர் கிண்டலடித்திருக்கிறார்கள். பாய்ஸ் என்னைப் பார்த்தால் ஒரு மாதிரி பேசுமே அந்தப் பெண்ணா என்றுதான் என்னைப் பார்ப்பார்கள். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நாம் நாமாக இருப்போம் என்று நினைத்து தான் வந்தேன். இப்போது என்னை எல்லோரும் அவர்கள் வீட்டுக்குழந்தையாக பார்க்கிறார்கள். வெளியில் என்னைப் பார்க்கும் பெரியவர்கள் ஷிவாங்கி பிள்ளை என்று கூறி என் தலையில் கை வைத்து ஆசிர்வதிக்கிறார்கள்.” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 2-வுக்கு என்ட் கார்ட் போட வேண்டாம் என்ற கோரிக்கை ரசிகர்கள் வைத்து வரும் நிலையில் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கு கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகிலா மற்றும் பவித்ரா ஆகியோர் தகுதி பெற்றிருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் டைட்டிலைப் பெற்று வெற்றியாளராவார்.