திருமணத்திற்குப் பின்னர் அனைத்து மாஸ் நடிகர்களும் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருமணத்திற்கு பின்னர் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதில்லை என்றும் அப்படியே நடித்தாலும் நாயகியாக நடிக்க முடியவில்லை என்றும் திருமணத்திற்குப் பின் நாங்கள் நாயகிகளாக நடிக்க கூடாதா? என்று அஜித் பட நாயகி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் ஷராதா ஸ்ரீநாத். இவர் தற்போது விஷாலின் ‘சக்ரா’, ‘மாதவன் நடித்து வரும் ‘மாறா’ உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஷராதா ஸ்ரீநாத் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஒரு நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பின் சினிமாவில் நாயகியாக நடிக்கும் ஆசையை விட்டுவிட வேண்டுமா? பெரிய நட்சத்திரங்கள் மட்டுமல்ல சாதாரண சிறு நடிகைகளின் பதிலையும் எதிர்பார்க்கிறேன். இது குறித்து விவாதம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய தோழி விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அவர் திருமணத்துக்கு பின் நான் நடிக்கலாமா? என தன்னிடம் கேட்டதாகவும் ஒரு நடிகையிடம் இருந்து இப்படி கேள்வி எழுந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார். ஒரு நடிகர் திருமணத்திற்குப் பின்னர் கதாநாயகிகளுடன் ரொமான்ஸ் செய்யும் போது, நடிகைகள் மட்டும் திருமணத்திற்கு பின்னர் கதாநாயகியாக நடிக்க கூடாதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகை ஷராதா ஸ்ரீநாத்தின் இந்த கேள்விக்கு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதில் அளித்து வருகின்றனர்.