ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களையும் கொரோனா வைரஸ் பாதிக்கத் தொடங்கியுள்ளது. கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பது ஐபிஎல் நிர்வாகத்தை கவலை அடையச்செய்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நேற்று நடக்க இருந்த கொல்கத்தா, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியும் கடுமையான தனிமைப்படுத்தும் முகாமுக்குச் சென்றுள்ளனர்.
இதனால் நாளை நடக்கும் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஒத்திவைக்கப்பட உள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் மேற்கூறிய இரு ஆட்டங்களும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. டெல்லியில் இன்று மும்பை இந்தியன்ஸ், சன்ரைரஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வழக்கம் போல் நடக்கும்.