மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்ட அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் இன்று (16) மதியமளவில் மட்டக்களப்பு – ஆயித்தியமலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்புரிமை அமைப்பான அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் மே 18 நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மட்டக்களப்பு – வவுணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்ட கிராமத்தில் குறித்த நினைவேந்தலும், கஞ்சி வழங்கும் நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டிருந்ததாகவும் இதனை அகம் மனிதாபிமான வள நிலைய உத்தியோகத்தர் பத்மநாதன் சிரோஜன் (29) முன்னெடுத்ததாகவும் தெரிய வருகின்றது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினரும், அரச புலனாய்வுத் துறையினரும் அவரை அவ்விடத்தில் கைதுசெய்து விசாரணைக்காக ஆயித்தியமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்திமலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.