இந்தியில் லால் இஷ்க், மேரி துர்கா உள்ளிட்ட தொலைக்காட்சித் தொடர்களில் நடித்திருந்தவர் நடிகை ப்ரெக்‌ஷா மேத்தா. 25 வயதாகும் இவர் க்ரைம் பேட்ரோல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடம் பிரபலமானார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி டிவி தொடர்களில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் தனது சொந்த ஊர் சென்று அங்கு கடந்த இரண்டு மாதமாக தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸ் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் ப்ரெக்‌ஷா கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மேலும் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நின்று போன நிலையில், வேலை இல்லாததால் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் ப்ரெக்‌ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவொன்றில் கனவில் மரணம் ஏற்படுவது கொடுமையான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக இதேபோல் 32 வயதாகும் பஞ்சாபைச் சேர்ந்த மன்மீத் கிரேவால் என்ற டிவி நடிகர் ஊரடங்கால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும், கடன் தொல்லையாலும் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.