சர்வதேச சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பு தொடர்பான விசாரணையின் பின்னர் 46 சிறுவர்களை மீட்டுள்ள அவுஸ்ரேலிய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பாக 14 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவர்கள் பலர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பிற வகையான சுரண்டல் உள்ளிட்ட துஸ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசாரணையை அடுத்து அமெரிக்காவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் அத்தோடு ஐரோப்பா, ஆசியா, கனடா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 16 மாதங்களுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்கள் சிறுவர் நிலையங்களில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவுஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு சிறுவர்கள் பராமரிப்பு நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.