புரெவி புயல் வலுவிழந்து தற்போது, நாட்டை விட்டு விலகிச் செல்வதால் இதன் தாக்கம் படிபடியாக குறைவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரெவிப் புயலின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வருவதைக் காணக் கூடியதாகவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் வடக்கு, வட.மத்திய மற்றும் வட.மேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலுக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40- 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.