கடந்த புதனன்று, அமெரிக்காவிலுள்ள உத்தா பாலைவனத்தில் திடீரென 12 அடி உயர உலோகத்தூண் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பது குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசாங்கம் அதை ரகசியமாக வைக்க முயன்றபோதும், அது குறித்து அறிந்துகொண்ட மக்கள் அபாயங்களையும் தாண்டி அந்த பாலைவனத்துக்கு சென்று அந்த மர்மத்தூணை புகைப்படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால், வெள்ளிக்கிழமை அந்த தூண் அந்த இடத்திலிருந்து மாயமாகியிருந்தது, அதற்கு பதிலாக, அங்கே ஒரு முக்கோண தகரம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில், அந்த தூண் மாயமான பரபரப்பு அடங்குவதற்குள், ரோமேனியா நாட்டில் அதே போல் ஒரு உலோக தூண் திடீரென தோன்றியது. அதன் உயரம் 13 அடி.

பின்னர் அவ்விரண்டு தூண்களும் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், மூன்றாவதாக அதேபோல் ஒரு உலோகத்தூண் அமெரிக்காவின் Pine Mountain என்ற இடத்தில் தோன்றியது. அந்த தூண் துருப்பிடிக்காத இரும்பால் ஆக்கப்பட்டிருந்தது. 10 அடி உயரம் இருந்தது.

இவையெல்லாம் என்ன, எங்கிருந்து வருகின்றன, உண்மையிலேயே ஏலியன்கள்தான் இவற்றை பூமியில் வீசினதா? அல்லது யாராவது வேண்டுமென்றே மக்களை பரபரப்பாக்குவதற்காக இப்படி செய்கிறார்களா என பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த மர்மத்தூண்களுக்குப் பின்னால் உள்ள மர்மம் விலகிவிட்டதுபோல் தோன்றுகிறது.

ஆம், The Most Famous Artist என்ற பெயர் கொண்ட ஒரு குழுவினர் தாங்கள்தான் அந்த தூண்களை நிறுவியவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

அந்த குழுவை உருவாக்கியவரான Matty Mo கூறும்போது, நேரடியான பதிலைக்கூறாமல், சட்டச் சிக்கல்கள் இருப்பதால் இது தொடர்பாக அதிகம் எதையும் கூற இயலாது என்று கூறிவிட்டார்.

ஆனால், வரும் நாட்கள், வாரங்களில் இன்னும் இதுகுறித்து நிறைய தகவல்கள் தருவேன் என்று கூறியுள்ளார் அவர்.

ஏலியன்கள் தொடர்பு கொள்வதற்காக இப்படி செய்ததா என கொஞ்ச நாட்கள் எண்ணவைத்துவிட்டு, பிறகு The Most Famous Artist குழுதான் மீண்டும் விளையாடுகிறார்கள் என ஏமாற்றுவதை விட, வேறு எப்படி இந்த மோசமான ஆண்டை எப்படி முடிப்பது என்கிறார் Matty Mo.

அத்துடன், உத்தா பாலைவனத்தில் வைக்கப்பட்டிருந்த அந்த 10 அடி உயர உலோகத்தூணை 45,000 டொலர்களுக்கு தங்கள் இணையதளத்தில் விற்பனைக்கும் வைத்துள்ளது அந்த குழு.