கொரோனா வைரசுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி தயீப் எர்டோகன், எனினும் அடுத்துவரும் மாதங்களில் மீண்டு வருவோம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எர்டோகன் கூறுகையில், “சமீபத்தில் வந்துள்ள கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும்போது நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. ஆனால், வரும் மாதங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கொரோனாவை நமது நாட்டிலிருந்து விலக்குவோம். மக்களைப் பாதுகாத்து வருடத்தின் இரண்டாம் பகுதியில் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பல நாடுகள் அதன் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வந்தாலும், பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொண்டு பல நாடுகள் அதன் எல்லைகளைத் திறந்து வருகின்றன. அந்த வகையில் துருக்கி ஜூன் மாதத்தில் விமானச் சேவை உள்ளிட்டவற்றுக்கு அனுமதியளித்தது.
துருக்கியில் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று துருக்கியில் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
துருக்கியில் இதுவரை ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் தற்போதுவரை 4 ஆயிரத்து 927 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.