திருப்பதி அடுத்த பாகாலா பாரதம்மிட்டாவை சேர்ந்தவர் அல்தாப் உசேன் (வயது32), ஷாமியா(27) என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.


நேற்று மாலை இவர்களது வீட்டில் இருந்து திடீரென தீப்பிடித்து பெரும் புகை வெளியேறியது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு தம்பதியினரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் மளமளவென பரவிய தீ வீடு முழுவதும் பற்றி எரிந்தது. மேலும் அக்கம் பக்கத்தினர் தம்பதியினரை மீட்க முயன்றும் முடியவில்லை.

இதனால் தம்பதியினர் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.