லண்டனிலுள்ள வீடு ஒன்றில் அமர்ந்தபடியே, நாசா செவ்வாய்க்கிரகத்துக்கு அனுப்பிய விண்கலமான பெர்சவரன்ஸை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கிறார் ஒரு பிரித்தானியர். பார்வைக்கு, அது முடி திருத்தகம் ஒன்றில் மேல் தளத்திலிருக்கும் ஒற்றைப்படுக்கையறை கொண்ட ஒரு சிறிய குடியிருப்பு.

ஆனால், அதற்குள் அமர்ந்திருக்கும் பேராசிரியர் சஞ்சீவ் குப்தா (55) என்பவர் சாதாரணமான ஆளல்ல.

உலகில் பல முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு உதவிய நிலவியல் நிபுணர் (geologist) அவர்.

1965ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்து, ஐந்து வயதாக இருக்கும்போது பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தவர் பேராசிரியர் குப்தா. லண்டன் இம்பீரியல் கல்லூரியில், புவி அறிவியல் நிபுணராக பணியாற்றுகிறார் அவர்.

உண்மையில், கலிபோர்னியாவில் நாசா ஆய்வகத்திலிருந்திருக்கவேண்டும் அவர், ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பயணம் தடை செய்யப்பட்டதால், லண்டனில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, வீட்டிலிருந்தபடி வேலையைத் தொடர்கிறார் பேராசிரியர் குப்தா.

அவர் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்யவேண்டியுள்ளதால், தனது சொந்த வீட்டிலிருந்து வேலை செய்தால், மனைவி பிள்ளைகளின் தூக்கம் கெடும் என்பதால், இந்த குடியிருப்பை வாடகைக்கு எடுத்துள்ளார் அவர்.

பெர்சவெரன்ஸ் விண்கலத்தில் பேராசிரியர் குப்தாவின் வேலை? பேராசிரியர் குப்தா ஒரு நிலவியல் நிபுணர் என்பதால், செவ்வாய்க்கிரகத்துக்கு சென்றுள்ள விண்கலம், எந்தெந்த இடங்களில் மண் மாதிரிகள் எடுக்கவேண்டுமென்பதை தீர்மானிக்கும் குழுவில் அவர் ஒருவராக இருக்கிறார்.

அப்படி சேகரிக்கப்பட்டு, பூமிக்கு அனுப்பப்படும் அந்த மண் மாதிரிகளை சோதித்து, செவ்வாய்க்கிரகம் உயிர் வாழ தகுதியானதா என்பதை அந்த குழு ஆராய இருப்பது குறிப்பிடத்தக்கது.