தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் உச்சத்தை தொட்டது. தினசரி பாதிப்பு 5 ஆயிரம் வரை இருந்தது.
பொதுமுடக்கம் மற்றும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட சுகாதாரத் துறையின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனாவின் தாக்கம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. இதனால் மக்கள் சற்றே நிம்மதியடைந்தனர்.
இந்த நிலையில் இந்தியா முழுவதும் கொரோனாவின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். திருச்சியில் கன்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியர் சென்று வந்த வகுப்பறையில் இருந்த 40 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த 15-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுடன் தங்கி இருந்த மேலும் சில மாணவ, மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இக்கல்லூரி கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள கல்லூரி மூடப்பட்டது. அங்கு நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை திருச்சி கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். அவருடன் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம் கணேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
தொடர்ந்து பொது சுகாதாரத் துறையின் மூலம் திருச்சி சுப்பிரமணியபுரம், சுந்தர் ராஜ் நகரில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடந்ததையும் கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.