தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், அக்கரபத்தனை, டொரிங்டன் தோட்டத்தைச் சேர்ந்த, இரு பிள்ளைகளின் தாயான 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சடலமாக மீட்கப்பட்ட பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என முன்னர் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர். எனினும், அதன்பின்னர் மேற்கொண்ட தொடர் விசாரணையையடுத்து, அப்பெண் கொலை செய்யப்பட்டார் எனத் தெரியவந்துள்ளது.

கணவரே அவரை கொலை செய்து சடலத்தை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தர்க்கம் காரணமாகவே மனைவியை கணவன் தாக்கிக் கொலை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரான கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர், சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

வாக்குமூலத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,

அக்கரபத்தனை நகரில் சிற்றூர்ந்து சாரதியாக பணியாற்றி வரும் நிலையில், அவர் கடந்த 24 ஆம் திகதி சிற்றூர்ந்து உரிமையாளரிடம் அனுமதி பெற்று, வாகனத்தை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த சிற்றூர்ந்தில் உயிரிழந்த தனது மனைவியின் உடலை கொண்டு சென்று நீர்த்தேக்கத்தில் வீசியுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின போது தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.