கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவ வல்லுநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவ்வப்போது அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

பிரபல சினிமா பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஐந்தாம் திகதி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது