இந்தியா - கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகா சாமி கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா மற்றும் ரசிகர் மன்றத்தினர், கூலிப்படையினர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் நடிகை பவித்ரா கவுடா மற்றும் தர்ஷனுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சிறப்பு விசாரணை அதிகாரிகள் தொடர்ந்து சேகரித்து வருகின்றனர்.
அதன்படி கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி செல்போனை பொலிஸார் தீவிரமாக தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் ரேணுகா சாமி பயன்படுத்திய செல்போன் எண்ணிலிருந்து மற்றொரு சிம்கார்ட் வாங்கி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில் ரேணுகா சாமி பயன்படுத்திய சமூக வலைதளங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது கொலை செய்யப்பட்ட ரேணுகா சாமி நடிகை பவித்ரா கவுடாவிற்கு 200-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச வார்த்தைகள் இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து பவித்ரா கவுடா அந்த கணக்கை முடக்கிய பின்பும் ரேணுகா சாமி போலி கணக்கை தொடங்கி மீண்டும் பவித்ரா கவுடாவுக்கு ஆபாச தகவல்கள் அனுப்பியது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் பவித்ராவின் செல்போனையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான தகவல்களை பெற இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கும் பொலிஸார் கடிதம் எழுதியுள்ளனர்.