இந்திய சீன எல்லையான லடாக்கில் மேலும் ஆயிரக் கணக்கான வீரர்களைக் குவித்தும், போர் விமானங்களைத் தரித்தும் வருவதால் சீனா இந்தியா இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தப் போர்ப் பதற்றம் காரணமாகவும், இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும் இந்தியாவில் வசித்து வரும் தனது சீனக் குடிமக்களைத் தனது நாட்டுக்கு மீள அழைக்கத் தொடங்கியுள்ளது சீனா..
சீன நாட்டு இராணுவ வீரர்களுக்குப் போருக்குத் தயாராகுமாறு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ஏனைய தளபதிகளுடன் முக்கிய உயர் மட்ட ஆலோசனையை அவசரமாக மேற்கொண்டுள்ளார். மறுபுறம் சீன அதிபர் ஜின்பிங் சீன நாட்டு இராணுவத் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புக்குப் பின்பு தான் சீன நாட்டு இராணுவ வீரர்கள் தீவிரமான பயிற்சியை மேற்கொண்டு தம்மை பலப் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாகத் தெரிய வருகின்றது.
இதில் முக்கியமாக சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே மாத்திரம் தான் இந்த முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூற முடியாது. ஏனெனில் ஏற்கனவே சீனாவுக்கு எதிராக தைவான் தனது நாட்டில் சுயாட்சிக்காக புரட்சி செய்து வருகின்றது. உள்நாட்டில் ஹாங்கொங் தன்னாட்சியைக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றது. தென் சீனக் கடல் சர்ச்சையில், மலேசியா, தாய்லாந்து போன்ற பல நாடுகள் சீனாவுக்கு எதிராகவும் அந்த நாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் அப்பகுதியில் தனது படை பலத்தை அதிகரிக்க முயன்று வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா சீனா எல்லை அருகே பாங்காங் டிசோ என்ற பகுதியில் உள்ள கரி குன்ஷா விமான நிலையம் அருகே சீனா அமைத்துள்ள புதிய விமான தளத்தில் 5 போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நிறுத்தப் பட்டுள்ளன. பதிலுக்கு இந்தியாவும் எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளதுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதால் நிலமை கொஞ்சம் மோசமாகித் தான் உள்ளது எனப் பரவலாகக் கருதப் படுகின்றது.
இந்நிலையில் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் தனது இணையத் தளத்தில், இந்தியாவில் வசிக்கும் சீனக் குடிமக்களுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதாலும், இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் இந்தியாவில் நீங்கள் சிரமத்தை எதிர்நோக்கினால் நீங்கள் உடனே தாயகம் திரும்புங்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை உலகளாவிய கொரோனா பெரும் தொற்று அச்சுறுத்தல் மற்றும் அதனால் உலகின் பல நாடுகளைப் புரட்டிப் போட்டுள்ள கடுமையான பொருளாதாரப் பின்னடைவு போன்ற காரணங்களால் 2020 ஆமாண்டு 3 ஆம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக சில இணைய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன.
இந்த ஊகங்களில் முக்கியமாக இந்தியா சீனா தவிர்த்து 3 ஆம் உலகப் போர் பின்வரும் நாடுகளுக்கிடையே பல்வேறு காரணங்களால் ஏற்படக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அவை குறித்த விபரம் கீழே :
அமெரிக்கா-ஈரான்
ஈரான் - இஸ்ரேல்
அமெரிக்கா-துருக்கி
காஷ்மீர்
அமெரிக்கா-வடகொரியா
அமெரிக்கா-சீனா