கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி செயலணியின் நடவடிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தினால் தமிழர் தாயகப் பிரதேசங்கள் திட்டமிட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் நடவடிக்கைக்கு எதிராக காரைதீவு பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காரைதீவு பிரதேச சபையின் 28ஆவது மாதாந்த அமர்வு சபையின் தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) சபையின் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே, மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளம் காணப்பட்ட பூர்வீக தமிழர் நிலங்கள் பறிபோகும் நிலை காணப்படுகிறது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில்தான் அதிக இடங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தமிழ் பேசும் சமூகத்தை திட்டமிட்ட முறையில் நசுக்கும் முனைப்பாகும்” என உறுப்பினர் ஏ.ஆர்.மொஹமட் பஸ்மீர் பிரேரணையைக் கொண்டுவந்து உரையாற்றினார்.

இதேவேளை, “இலங்கையில் கடந்து வந்த ஜனாதிபதிகளும் இனிவரும் காலங்களில் வரும் ஜனாதிபதியும் தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புகளை தொடர்ந்தும் செய்துகொண்டுதான் இருப்பார்கள்.

தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்ட இயக்கங்கள் தோற்றம் பெற்றாலும் அவை திசைமாறிச் சென்றதுடன் ஒரேயொரு போராட்ட இயக்கம் 30 வருட கால தமிழ் மக்களின் இருப்புக்காகக் போராடியது.

அவர்கள், இன்று இல்லை என்ற நிலையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அடக்குமுறைகள் தோற்றம் பெற்றுள்ளன“ என உறுப்பினர் இராசையா மோகன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை இன, மத வேறுபாடு இன்றி பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்திருந்தார்.

இதில், கிழக்கிலுள்ள தொல்பொருட்களை அடுத்த தலைமுறைக்காக பாதுகாப்பதற்கு இன, மத மற்றும் ஏனைய பாகுபாடுகள் இன்றி அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் கிழக்கு மாகாணத்தில் பல தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் உள்ளன, அவை பல காரணங்களால் ஆபத்திற்குள்ளாகியுள்ளன, எனவே அந்த தொல்பொருட்கள் தேசிய பாரம்பரியத்துடன் தொடர்புடையவை என்பதால் இன,மத வேறுபாடுகள் இன்றி அரசாங்கம் அவற்றைப் பாதுகாக்க விரும்புகின்றது

இந்த தொல்பொருள் பகுதிகளை பாதுகாப்பதற்காகவும் மீள உருவாக்குவதற்காகவும் செயலணி அனைத்து சமூகத்தினருடனும் இணைந்து செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தின் தொல்பொருட்களை பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது