அவுஸ்ரேலிய அரசு மற்றும் தனியார் துறைகள் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்கொற் மொரிசன் தெரிவித்துள்ளார்.

அரசு மற்றும் தனியார் துறையின் கணினி அமைப்பின் மீதே சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டுள்ளதுடன் எப்போதிலிருந்து தொடங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில், அந்நாட்டின் அரசு மற்றும் தனியார் துறைகளின் முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியாரின் இணையதள பக்கங்களுக்குள் நுழைந்துள்ள ஹக்கர்கள் முக்கியமான உட்கட்டமைப்பு, அரசின் திட்டங்கள், கொள்கை முடிவுகள், முதலீடு போன்றவை தொடர்பான பல்வேறு தகவல்களைத் திருடியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போதுவரை சைபர் தாக்குதல் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ளதாகவும், அதை சரிசெய்ய தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஸ்கொற் மொரிசன் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த சைபர் தாக்குதலுக்கு ஒரு நாடு பின்னணியில் இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் அவுஸ்ரேலியா – சீனா இடையே மோதல் நிலவிவருகின்ற நிலையில் இத்தாக்குதலை சீனா செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.