தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொருட்கள் வழங்குவதற்கு அரிசி, பருப்பை ஒதுக்கக்கோரி மத்திய அரசுக்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோக திட்டத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வானுடன் காணொலிக் காட்சி மூலம் தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

கொரோனா பரவலை தடுக்க சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளுக்கு முழு ஊரடங்கு உத்தரவு 19-ந் தேதியில் (இன்று முதல்) இருந்து 30-ந் தேதிவரை அமல்படுத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் இன்னல்களை மக்கள் எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரிசி ரேசன் அட்டைதாரருக்கும் ரூ.1,000 வழங்கும் வகையில் ரூ.218.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ என்ற திட்டத்துக்கான அரசாணையை 2019-ம் ஆண்டு செப்டம்பரில் தமிழக அரசு பிறப்பித்து, இதுதொடர்பாக மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பொதுவினியோக திட்ட பயனாளிகளில் 99.72 சதவீதத்தினர் ஆதாரை இணைத்துள்ளனர். வரும் செப்டம்பரில் ‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக இருக்கும்.

தமிழகத்துக்கு மத்திய அரசிடம் இருந்து நெல் அரவை மானியத் தொகை ரூ.2,609 கோடி நிலுவையில் உள்ளது. அந்த தொகையை உடனே வழங்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து எளிதாக நெல் கொள்முதல் செய்ய முடியும்.

தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கு ரேசன் அட்டைதாரருக்கு இலவசமாக வழங்குவதற்கு தேவையான அரிசி மற்றும் பருப்பை அளிக்க வேண்டும் என்று கடந்த 12-ந் தேதி முதல்-அமைச்சர் உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதை அனுமதித்து தேவையான அளவு ரேசன் பொருட்களை ஒதுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் உணவுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சுதாதேவி, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.