இந்திய இராணுவ வீரர்கள் மீதான சீன இராணுவத்தின் தாக்குதலை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா, சீன கம்யூனிஸ்ட் கட்சி முரட்டுத்தனத்தைக் கையாள்கிறது எனத் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய, சீன இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் மரணமடைந்தனர். அதேபோல, சீன இராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.

ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடாத நிலையில், சீனத் தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ, சீனாவின் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “சீன கம்யூனிஸ்ட் கட்சி முரட்டுத்தனத்தைக் கையாள்கிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லைப் பதற்றங்களை சீனா அதிகரித்துள்ளது.

மேலும், தென்சீனக் கடல் பகுதியை இராணுவ மயமாக்குகிறது. சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது. முக்கியக் கடல் பாதைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

இத்துடன், கொரோனா வைரஸ் குறித்து பொய்கூறி அதனைப் பிற நாடுகளுக்குப் பரவச் செய்தது. அதன் காரணமாக இலட்சக் கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். உலகப் பொருளாதாரம் அழிந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.