இந்தியாவில் பள்ளிக்கு சென்று திரும்பிய 12-ஆம் வகுப்பு மாணவி 5 பேர் கொண்ட கும்பலால் போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் இருக்கும் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் கடந்த பிப்ரவரி 22-ஆம் திகதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். மதியம் 1.30 மணியளவில் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு மாலை 4 மணி அளவில் வழக்கமாக வீடு திரும்பும் மாணவி வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பாததால் அவர் பயின்று வந்த ஆங்கில வகுப்புக்கு சென்று பெற்றோர் விசாரித்துள்ளார்.
அப்போது மாணவி வரவேயில்லை என்ற தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரின் பெற்றோர் பல இடங்களில் மாணவியை தேடிப்பார்த்து விட்டு இரவு 7 மணி ஆனதால் குருஷேத்ராவில் உள்ள பராரா சவுக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காக சென்றனர்.
அப்போது, வழியில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் ஒரு பெண்ணை நடுவில் அமர வைத்து அவரின் தலையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்றை குறி வைத்து சென்று கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அருகில் சென்ற போது தான் அவர் தங்களுடைய மகள் என்பது அவரின் தந்தைக்கு தெரியவந்தது. எப்படியோ அவர்களிடமிருந்து தனது மகளை மீட்டு பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மகளை மீட்ட போது அவருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது, பின்னர் விசாரணை மேற்கொண்ட போது, சம்பவத்தன்று மாணவி தனது நெருங்கிய தோழியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவரின் தோழியின் உறவினரான நபர் ஒருவர், தோழியின் வீட்டில் அவரை இறக்கிவிடுவதாக கூறி மோட்டார் சைக்கிளின் அழைத்து சென்றிருக்கிறார்.
அதன் பின், அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் பணி புரிந்து வரும் ஹோட்டலுக்கு மாணவியை அழைத்து சென்றிருக்கிறார். அங்கு அவரும் அவருடைய நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவருக்கு 18 வயதும் ஒருவர் சிறுவர் என்பதும் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள இரண்டு பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.