இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையே சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடல் பகுதியை நீந்துவதற்காக ஐதராபாத்தை சேர்ந்த சியாமளாஹோலி(வயது 48) என்ற பெண் ராமேசுவரம் வந்துள்ளார்.
இவர் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் ராமேசுவரத்திலிருந்து ஒரு விசைப்படகில் இலங்கை தலைமன்னார் புறப்பட்டு செல்ல உள்ளார். இரவு முழுவதும் படகிலேயே தங்கியிருக்கும் அவர் 19-ந் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்க உள்ளார். மாலை 4 மணிக்குள் அவர் தனுஷ்கோடி கரையை வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுபற்றி சியாமளா கூறியதாவது:-
எனது நீச்சல் பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரி ராஜீவ்திரிவேதிதான். கிருஷ்ணா நதியில் ஒன்றரை கிலோமீட்டர் தூரமும், கங்கை நதியில் 13 கிலோ மீட்டர் தூரமும், கொல்கத்தாவில் உள்ள ஹூக்ளி நதியில் 14 கிலோ மீட்டர் தூரமும் நீந்தி உள்ளேன். 2019-ல் போர்பந்தரில் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்று தங்கப்பதக்கமும் பெற்றுள்ளேன். ராம சேது கடலில் நீந்துவது எனது கனவு மற்றும் லட்சியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் அவர், “இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை நீந்தி வருவதற்கு இந்திய-இலங்கை அரசிடம் முறையான அனுமதி பெற்றுள்ளேன். இதுவரை தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே பல பேர் நீந்தி வந்து சாதனை புரிந்துள்ளனர். இருந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சிப்பது இதுதான் முதல் முறை” என்று பெருமிதத்துடன் கூறினார்.