நேற்று பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர் வரவு திருப்திகரமான மட்டங்களில் இருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுப்பது பற்றி பெற்றோரும், பாடசாலை சமூகத்தினரும் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

தொலைக்கல்வி மற்றும் இணையவழி கற்றல் வசதிகளும், தொலைக்காட்சி மற்றும் வானொலி வசதிகளும் குறைந்த பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகளில் மாணவர்களின் வரவு 80 சதவீதத்தை எட்டியிருந்ததாக செயலாளர் தெரிவித்தார்.

நேற்று நாட்டில் உள்ள சுமார் ஐயாயிரத்து 100 பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகின. தரம் ஆறு தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மேல் மாகாணத்திலும், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் உள்ள பாடசாலைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.