ராஜஸ்தானில் 60 வயதான முதியவர் ஒருவர் 2வது திருமணம் செய்து வைக்கக்கோரி மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவாறு போராட்டம் நடத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் வசித்து வரும் 60 வயதான முதியவர் கடந்த வாரத்தில் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் மின் கம்பத்தில் திடீரென ஏறியுள்ளார். எதற்காக, இந்த வயதில் மின் கம்பத்தில் ஏறுகிறார் என புரியாத அப்பகுதி மக்கள் உடனடியாக மின்கம்பத்தை சூழ்ந்தனர். சுமார் 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயக்கூடிய மின்கம்பம் என்பதால், அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த முதியவர், தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என ஊர் மக்கள் முன்பு மிரட்டல் விடுத்து அடம்பிடித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் முதியவரை தங்களால் இயன்ற அளவு சமாதானப் படுத்தியுள்ளனர். குடும்பத்தினர் கெஞ்சியும் தனது முடிவில் இருந்து மாறாமல் விடாப்பிடியாக இருந்துள்ளார். இத்தகைய தற்கொலை மிரட்டல் போராட்டத்தை நடத்தியவர் சோபரான் சிங். 60 வயதாகும் அவர் தோல்பூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். 5 பேருக்கு தந்தையான அவருக்கு தற்போது பேரன், பேத்திகள் இருக்கின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சோப்ரான் சிங்கின் மனைவி இறந்துவிட்டதால், கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இப்போது, அவருக்கு, குடும்பத்தினரிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிள்ளைகளிடம் கரிசனம் இல்லாததால், தன்னுடைய கடைசி கால வாழ்க்கையை எண்ணிப் பார்த்த சோபரான் சிங், தனக்கு ஒரு துணை வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதற்காக, குடும்பத்தினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்திக் கூறியுள்ளார். பேரன், பேத்தி எடுத்த வயதில் மற்றொரு திருமணம் உங்களுக்கு தேவைப்படுகிறதா? என சோபரான் சிங்கின் கோரிக்கையை குடும்பத்தினர் நிராகரித்துள்ளனர்.

என்ன செய்வதென்று யோசித்த சோபரான் சிங், வீட்டுக்கு அருகில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பது என முடிவெடுத்துள்ளார். அதன்படி, 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின்கம்பத்தில் ஏறிய சோபரான், தனக்கு திருமணம் செய்துவைக்கிறோம் என குடும்பத்தினர் ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், குடும்பத்தினரும், ஊர்மக்களும் அவரை ஒரு வழியாக சமாளித்து மின் கம்பத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவரின் போராட்டம் குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின் வாரியத்துக்கு தகவல் கொடுத்து, மின்சாரத்தையும் நிறுத்தியுள்ளனர். சோப்ரானின் போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, மின்சார தடை மீண்டும் சீரமைக்கப்பட்டது.